விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம்
(மன்னார் நிருபர்)
(17-10-2021)
விடத்தல் தீவு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை கண்டறிந்து அதை வளர்த்து மேம்படுத்துவதே எமது நோக்கம் என விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம் தெரிவித்துள்ளார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தில் தீவு கிராமத்தில் விடத்தல் தீவின் நண்பர்கள், விடத்தல் தீவில் வசிக்கும் ஐந்து முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட இளம் கால்பந்து வீரர்களுக்காக விடத்தல்தீவு கால்பந்து அகடமி ( VIFA ) உருவாக்கப்படுவதை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.
இவ் அமைப்பின் குறிக்கோள் விடத்தல்தீவு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை கண்டறிந்து அதை வளர்த்து மேம்படுத்துவதேயாகும்.
குறித்த அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை(18-10-2021) திங்கள் கிழமை மாலை 2.45 மணிக்கு விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற உள்ளது.
இந்த அகடமி எங்கள் கிராம நண்பர்கள் மற்றும் விடத்தல் தீவு நண்பர்கள் குழுமத்தினரது உதவியுடன் வளர்க்கப்படும்.
இந்த அகடமியின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
எனது குழந்தை பருவத்திலிருந்தே இந்த அகடமியை அமைப்பது கனவாக இருந்தது.
(VIFA) அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினதும் விடத்தல் தீவை சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களினது ஒத்தாசைகளுடன் இந்த அகடமியை வளத்துக் கொள்ள வேண்டும்.
உதைபந்தாட்ட லீக்கிலிருந்து பெற்ற விரிவான தத்துவார்த்த மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி திறமையான வீரர்களை உருவாக்கி இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இவர்களின் பங்களிப்பை வழங்குவதே நோக்கமாகும்.என தெரிவித்தார்.
விடத்தல் தீவு நண்பர்கள் குழுமம் 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது விடத்தல் தீவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
























