யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் குறைவான வறுமை கோட்டிற்குட்பட்ட சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலைக்கு ரட்ணம் பவுண்டேசன் பிரித்தானியா மற்றும் வன்னிஹோப் அவுஸ்திரேலியா ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரனையில் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு வலிகாம் கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் ஞானலிங்கம் ஆதவன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு. நாகராஜா அம்பிகைபாகன், வன்னி ஹோப் மற்றும் யு.எஸ்.டி.எப் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துக்கொண்டனர். .
இந்த பாடசாலையில் நூற்றுபத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுவதுடன் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை காணப்படுகின்றது. இந்த பாடசாலையானது கடந்த கால உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் அன்றாட கூலி தொழில் செய்கின்றனர். இந்த பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதிகள் கிடைத்தமை இங்குள்ள மாணவர்களது தகவல் தொழிநுட்ப கல்வி வசதிகளை மேம்படுத்த கிடைத்தமை வரபிரசாதமாகும்.

மேலும் பிரதமவிருந்தினர் தமது உரையில் இப் பாடசாலை முகாமைத்துவத்தின் அர்ப்பணிப்பும் நல்லாளுகையுமே பாரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. பாடசாலைகள் தமது இணைபாட விதானங்களையும் சமூக ஒருங்கினைவுச்செயற்பாடுகளையும் எவ்வாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு எமது வலயத்திலே சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை முன்னுதாரணமாக திகழ்கின்றது.எந்த வளங்களும் வசதிகளும் அற்ற நிலையில் இருந்த இப்பாடசாலை இன்று சகல வசதிகளும் கொண்ட நகர்ப்புற பாடசாலை போன்று காட்சியளிக்கின்றது.
இப் பாடசாலையின் அதிபர் ஸ்ரீகமலநாதன் பல தனிநபர்களிடமிருந்தும் ,தேசிய சர்வதேச அமைப்புக்களிடமிருந்தும் இந்த உதவிகளைப் பெற்று வளம் கொலிக்கும் பாடசாலையாக மாற்றியுள்ளார். கடந்த ஆண்டிலே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100%சித்தி பெற்றமை போன்று 2021இலும் 100%சித்தியுடன் சிறப்புற மிளிர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
























