(13-01-2022)
பொரளையில் உள்ள தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெப்பமடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்க பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மூவர் கைது செய்யப்பட்டிருந்த துடன், அவர்களில் ஒருவர் பிரதான சந்தேக நபர் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கமைய 56 வயதுடைய மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேக நபர் சுமார் 16 வருடங்களாக அந்த தேவாலயத்தில் பணியாற்றி வருவதோடு, தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவனின் உதவியை பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கைக்குண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
























