இலங்கையின் பொருளாதாரத்தை பேணுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளிப்பு!
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை பலமிக்கதாக பேணுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அத்தோடு நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்க முடியும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றதன் பின்னர் அவர் பிரதமரை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அமெரிக்கா , இலங்கையுடன் கொண்டுள்ள அரசியல் சமூக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு , அவற்றை மேம்படுத்துவதற்கும் தான் முயற்சிப்பதாக தூதுவர் ஜூலி ஜே.சங் இதன் போது பிரதமரிடம் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை பலமிக்கதாக பேணுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என தெரிவித்த தூதுவர் , நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்க முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் உறவுகளை வழமையை போன்றே முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இதன் போது சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , புதிய பதவியில் வெற்றிகரமாக செயற்படுவதற்கு தூதுவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை செய்துள்ள தூதுவர் ஜூலி சங் , ‘ நான் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை சந்தித்த போது அனைத்து இலங்கையர்களின் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா ஒத்துழைக்கக்கூடிய வழிகளைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஜனநாயக ஆட்சி மற்றும் இலங்கையின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் நல்வாழ்வுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.