(மன்னார் நிருபர்)
(28-03-2022)
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar), இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வை சந்தித்தார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி .ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி , உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதற்கு நன்றியையும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.