ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னள் வீரர் டிம் பெய்ன் தனது பயிற்சியாளராகும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 2018 – 2021 ஆண்டுகளில் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் டிம் பெயன். கீப்பராக செயல்பட்ட டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 23 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமையேற்றுள்ளார். இந்த போட்டிகளில் 11 முறை ஆஸ்திரேலிய அணி வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் பெற்றது. 4 போட்டிகள் தோல்வியில் முடிந்தன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மறு சீரமைப்பில் டிம் பெய்ன் முக்கிய பங்காற்றியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் டிம் பெய்ன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இத்தனை ஆண்டுகாலம் கிரிக்கெட் ரசிகர்கள் என் மீது செலுத்திய அன்பு நெகிழ்ச்சியடைய செய்கிறது. நான் ஓய்வை அறிவித்ததும் என் மீது அன்பு கொண்டு ஏராளமானோர் மெசேஜ் செய்திருந்தனர். அவை என்னை உணர்ச்சிவசப்படுத்தின. என்னைப் பொருத்தளவில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், விளையாட்டில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெய்னின் அதிகபட்ச ஸ்கோர் 92 ரன்கள். சராசரி 32.63. மேலும் அவர் 35 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தொடரை டிம் பெய்ன் வழி நடத்தினார். 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெய்ன் விலகிய பின்னர் பாட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.