அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பதவியில் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி தொடர்ந்து அவர் மீது பரபரப்பான சர்சைகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது.
2024 தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக மீண்டும் களம் இறங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். ட்ரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தந்துள்ளனர். ஆபாச பட நடிகை ஸ்டாரமி டேனியல்ஸ், பத்திரிகையாளரும், புகழ்பெற்ற பத்தி எழுத்தாளுருமான ழான் கரோல் என்ற பெண்மணி ஆகியோர் ட்ரம்ப் மீது பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில் மற்றொரு பெண் புதிய புகார் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜெஸ்சிக்கா லீட்ஸ் என்ற அந்த பெண் மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் இந்த புகாரை தந்துள்ளார்.
அதில் 1978இல் விமானப் பயணம் மேற்கொண்ட போது அதில் ட்ரம்ப் சக பயணியாக வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தும், மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜெசிக்கா புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஸ்கர்ட் உடையில் அத்துமீறி கை வைத்து தொல்லை கொடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
புகார் கொடுத்த ஜெசிக்காவுக்கு தற்போது வயது 81. வழக்கு தொடர்ந்த ழான் கரோல் வயது 79. சர்ச்சையில் சிக்கியுள்ள ட்ரம்பின் வயது 76 ஆகும். 2016 தேர்தல் பரப்பரையின் போதே ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் குவிந்தன. தற்போது அடுத்த தேர்தல் விரைவில் வரப்போகும் நிலையில், ட்ரம்பை சுற்றி புதிய சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.