(மன்னார் நிருபர்)
(10-07-2023)
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் குறித்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் கருத்து தெரிவிக்கையில்,,,
அரசாங்கத்தின் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் தகுதியான 234 பேரின் விவரங்கள் அனுப்பி வைத்திருந்தோம்.
இவர்களில் 42 பேர் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த 42 பேரில் இறுதியாக 45 வயதுக்கு கீழ்பட்ட 4 பேரூம், 45 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உள்ளடங்கலாக 5 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் 2 சாரதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மூவரின் விபரங்களும் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றுக் கொள்ளும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காணப்பட்ட போதும் குறைந்த சம்பளத்தில் உங்கள் பணியை முன்னெடுத்து இருந்தீர்கள்.
தொடர்ந்து சவால்களுக்கு முகம் கொடுத்து பணியாற்றி வந்தமையினால் உங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைத்துள்ளது.
தற்போது நீங்கள் அரச பணிக்குள் இணைந்துள்ளீர்கள்.மக்கள் சேவையை மனதில் நிறுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை முன்னெடுக்க வேண்டும்.என தெரிவித்தார்.
























