இன நல்லிணக்கம் ஏற்படாமல் முன் நகர்த்தப்படும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் சட்டங்கள் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் மத அடையாளங்களுக்கு மிக ஆபத்தானவை என்பதை தமிழர் தரப்பு விளங்கிக் கொள்வது அவசியமானது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைகளை பௌத்த சிங்கள மயமாக்குவதற்கு சிங்கள கடும் போக்காளர்கள் கையில் எடுக்க இருக்கும் ஆயுதம் மத சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிப்பதை தடுப்தற்கான சட்டம்.
சட்டம் என்ற போர்வையில் ஜனநாயகப் போராட்டங்களையும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான எதிர்க் குரல்வளையையும் நிரந்தரமாக அடக்குவதற்கு சிங்கள பேரினவாத அரசாங்கம் தயாராகிறதா?
இன நல்லிணக்கம் இல்லாமல் கொண்டுவரப்படும் மத மற்றும் கலாசார சட்டங்கள் தமிழர்களின் இருப்பை கபளீகரம் செய்வதற்கு என்பதை தமிழர் தரப்பு மறந்து விடக்கூடாது
தற்போது தாயகப்பகுதியில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தமிழர் தரப்பினால் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதே சட்டங்களின் உள் நோக்கம் அத்துடன் மத சுதந்திரம் என்ற பெயரில் தமிழரின் மத கலாசார அடையாளங்களை இல்லாது அழித்தல் ஆட்சியாளரின் பிரதான இலக்கு – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
























