தமக்கான நிரந்தர நியமனத்தை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண டெங்கு களத் தடுப்பு உதவியாளர்கள் இன்று வியாழக்கிழமை (13.07.2023) நண்பகல்-12 மணி முதல் பிற்பகல்-02.15 மணி வரை யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள், “அரசே டெங்கு கள உதவியாளர்களை நிரந்தரமாக்கு, 22,000 ரூபா ஊதியம் எமது வாழ்வாதாரத்திற்குப் போதுமா?, வேண்டும் வேண்டும் எமக்கான நிரந்தர நியமனம் வேண்டும்” உள்ளிட்ட பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி நாடு தழுவிய ரீதியில் டெங்கு களத் தடுப்பு உதவியாளர்கள் கடந்த-10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடமாகாணத்திலும் நேற்றையதினம் புதன்கிழமை (12.07.2023) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படாத 82 டெங்கு களத் தடுப்பு உதவியாளர்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாகவே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளதுடன் நாளை வெள்ளிக்கிழமை (14.07.2023) காலை சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகளைச் சந்தித்து வடமாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினைக் கையளித்திருந்ததுடன் தற்போதைய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி. த.சத்தியமூர்த்தி போராட்ட நிறைவில் வடமாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். இதுதொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.