யுத்த காலங்களில் பிட்டும்வடையும்ரொட்டியும்தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற தொனிப்படயாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்
அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்கு மாறுபிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது.
அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழும்பிலிருந்து வந்த சிரேஷ்ட பிரதி வாதாடி மன்றாடியார் முன்னைய அமர்வில் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரசாத் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பலமான எதிர்வினையை கிளப்பியுள்ளன. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட பிட்டும்வடையும் விடயத்தில் ஒன்று பட்டு நிற்கிறார்கள். மொத்தத்தில் இது தமிழ் மக்களை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று படுத்தியிருக்கிறது. அதே சமயம் அது முகநூல் உலாவிகளின் கவனத்தை மாவீரர்நாளிலிருந்து திசைதிருப்பி புட்டின் மீது குவித்துள்ளதா?
ஒரு மக்கள் கூட்டத்தின் உணவை இழிவு படுத்திக் கூறுவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான அரசியலின் ஒரு பகுதி தான் என்பதனை எனது நண்பரான ஒரு புலமையாளர் சுட்டிக் காட்டினார். ஏற்கனவே அரசாங்கம்தமிழ் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மரபுரிமைச் சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வகைமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தமரபுரிமை சொத்துக்களை முன்நிறுத்தும் ஒரு போக்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. சிங்கள பௌத்தமயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த மரபுரிமை யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கில்தமிழர்களோமுஸ்லிம்களோ இல்லாத ஒரு தொல்லியல் செயலணியை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. ஒரு தமிழ் மருத்துவர் அதில் இணைய முன் வந்த போதிலும் அவரை உள்ளெடுக்க அரசாங்கம் தயாரில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தின் உபகரணமாகிய ஒரு போலீஸ் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தமை தமிழ் மக்களை இன ரீதியாக; உணவு ரீதியாக; பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைத்திருக்கிறது.
போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் போர்க்காலத்தில் பிட்டு வடை ரொட்டி தோசை ஆகியவற்றை மட்டும் சாப்பிடக் கூடியதாக இருந்த தமிழ் மக்களுக்கு பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமையை பெற்றுக்கொடுத்திருக்கிறது என்ற தொனிப்பட அப்பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார். இதன் மூலம் அவர் பின்வரும் விடயங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்த்த முற்படுகின்றாரா?
முதலாவது அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய பாணியிலான ரெசபிகளை சுவைக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இரண்டாவது புட்டும்வடையும்பீட்சாவை விட தாழ்ந்தவை.
மூன்றாவது புட்டும்வடையும் சாப்பிடும் ஒரு வாழ்க்கைமுறை உயர்வானது அல்ல.
நாலாவது போராட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பீசாகிடைத்திருக்காது.
ஐந்தாவது உணவு தான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உரிமைகள் அல்ல.
மேற்கண்டவற்றைத்தொகுத்துப் பார்த்தால் அதில் அரசியல் ரீதியான தாக்குதல் இருக்கிறது.பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் இருக்கிறது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறது. வாழ்க்கை முறையைக் கொச்சைப் படுத்துகிறது. உணவுப் பழக்க வழக்கங்களை கொச்சைப் படுத்துகிறது.
ஆனால் இது தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு 1968 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்காசுதந்திரக்கட்சி,கொம்யூனிஸ்ட்கட்சி, சமசமாஜக்கட்சி ஆகியகட்சிகள் இணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக “தோசவட அப்பிற்ற எப்பா”- தோசை வடை எமக்கு வேண்டாம் என்று கோஷம் எழுப்பப்பட்டதை இங்கே நினைவூட்ட வேண்டும்.
ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பதுஎன்றால் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை விமர்சிப்பதும் ஒரு வழிதான். இதற்கு உதாரணம் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகம் பூராகவும் பீதியும் அதிர்ச்சியும்ஏற்பட்ட பொழுது சீனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்தன. உலகப் பேரரசான அமெரிக்காவின் அதிபர் அதனை வுகான்வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைத்தார். பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் அந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கொரோனாவைரசின் மீதான கோபத்தை ; பயத்தை சீனர்களின் மீதான கோபமாக சீனர்களின் மரபுரிமை சொத்துக்களான அவர்களின் உணவுப் பழக்கவழக்கத்தின் மீதான விமர்சனமாக பலரும் முன் வைத்தார்கள்.
வரலாற்றில் இதற்கு முன்னரும் இந்த நிலைமை இருந்தது. ஒரு மக்கள் கூட்டத்தை இழிவு படுத்துவதற்கு அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை இழிவு படுத்தும் ஒரு போக்கு தொடர்ச்சியாக வரலாற்றில் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்துவதற்கு பன்றி இறைச்சியை இழுத்து கதைக்கும் ஒரு போக்கு பரவலாக உண்டு.
தமிழ்ச்சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அல்லது பிரதேசத்தை அல்லது சாதியை இழிவுபடுத்துவதற்கு இவ்வாறு உணவுப் பழக்கவழக் கங்களை சுட்டிக்காட்டித் திட்டும் ஒரு போக்கை காண முடியும்.
உதாரணமாக கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் போது வேதக்காரர்கள் மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் விமர்சிப்பதுண்டு.
இப்பொழுது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை அரசாங்கம் தடுக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலும் மாட்டிறைச்சிக்கறி சாப்பிடும் சமயங்களையும் சமூகங்களையும் விமர்சிக்கும் ஒரு போக்கைக் காணலாம்.
இவ்வாறான ஒரு வரலாற்றுப் போக்கின் ஆகப்பிந்திய விவகாரம்தான் புட்டும்வடையும் விவகாரமாகும். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் புட்டு புராணம் ஒன்றை பரவலாக காண முடியும். புட்டின் பூர்வீகம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பரவலாக பார்க்க முடியும்.
இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று அழைப்பார்கள். பாண்டிய மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் செம்மனச் செல்வியின் கதையில் அது காணப்படுகிறது.
காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிய பொழுது ஊர் மக்களை அணை கட்டுவதற்கு மன்னன் அழைத்தான். ஊரில் ஒரு பாட்டி இருந்தார். பெயர் செம்மனச்செல்வி. பிட்டு அவித்து விற்று வாழ்க்கையை நடத்திவந்தார். அவருக்கு யாரும் இல்லை. அவரால் அணை கட்ட முடியாது. கூலிக்கு ஆளை அமர்த்தவும்காசில்லை. அவர் சிவபெருமானிடம் வருந்தி அழுதார்.
சிவன் ஒரு கூலியாளாக அவரிடம் வந்தார். கூலிக்கு பதிலாக பிட்டு அவித்து தருவேன் என்று பாட்டி சொன்னாள். உதிர்ந்த பிட்டுகளைஎனக்குத் தா உதிராதபிட்டுகளை நீ விற்றுவிடு என்று சிவபெருமான் சொன்னார். பாட்டியும்புட்டை அவிக்கத் தொடங்கினார். அவித்த புட்டெல்லாம் உதிரத் தொடங்கியது. சிவபெருமான் எல்லாவற்றையுமே போட்டுப்பிடித்தார். உண்டகளைப்பில் ஒரு மர நிழலில் உறங்கி விட்டார். மன்னன் அணைக்கட்டு வேலை நடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் வந்தான் வேலை செய்யாமல் படுத்திருக்கும் கூலியை கண்டான். பிரம்பை எடுத்து முதுகில் அடித்தான். அது சிவனின் மேல் விழுந்த ஆடி. முழு உலகத்தின்மீதும் விழுந்தது. அடித்த மன்னனின் முதுகிலும் விழுந்தது. இதுதான் செம்மனச் செல்வியின் கதை.
அது பழைய கதை.புட்டுக்கு மண் சுமந்தபெருமானின் கதை. இப்பொழுது புதிய கதை. அது புட்டை இழிவு செய்த்த போலீஸ்காரரின் கதை. போராட்டத்தை கீழ்மைப்படுத்தக் கூறிய கருத்து. ஆனால் பிரசாத்பெர்னாண்டோ அடித்த அடி எல்லா தமிழர்களின் முதுகிலும் விழுந்தது. அவருடைய முதுகிலும் விழுந்தது. ஏனெனில் அது தமிழ் மக்களை ஒன்று திரட்டி விட்டது. நீதிமன்றத்தில் தான் கூறிய வார்த்தைகளுக்கு இப்படி ஒரு திரண்ட எதிர்வினை இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.