சுகாதார சுதேச மருத்துவ அமைச்சிற்கு அவசர கடிதம்.
(மன்னார் நிருபர்)
(16-02-2021)
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அங்கத்தவர்களான சுகாதார ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் வடமாகாண தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனர் மற்றும்,வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சிற்கு இன்றைய தினம்(16) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைபுரியும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அங்கத்தவர்களான சுகாதார ஊழியர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் மற்றும் தை மாத மேலதிக கொடுப்பனவு தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் உணர்கின்றோம்.
இதனால் மனதளவில் பெரிதும் கவலை கொண்டவர்களாக கடமை புரிந்து வருகின்றோம்.
மேற்படி கைவிரல் அடையாள இயந்திர பாவனை சம்பந்தமாக வட மாகாண பிரதம செயலாளர் , சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் , ஆகியோரால் முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிருபங்களின் பிரகாரம் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கைவிரல் அச்சு இயந்திரம் பாவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அதனை மாற்றி வைத்தியர்கள், தாதியர்கள் துணை மருத்துவ சேவையாளர்கள் தவிர்ந்த அனைவரும் கைவிரல் அச்சு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் தான் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது சுகாதாரத்துறையில் எம்மை ஓர வஞ்சனையான பார்வையில் பார்ப்பதாக நாங்கள் உணர்கின்றோம் .
ஆகவே இதற்கான நல்ல தீர்வு கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் எங்களது ஒற்றுமையையும் நாங்கள் பயன்படுத்தி வட மாகாணம் முழுவதும் எங்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.