இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட தூதுவர் இலங்கை அமைச்சரவையின் அறிக்கை தொடர்பில் ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கமே அனுமதி அளிக்க வேண்டுமே தவிர உயர் ஸ்தானிகராலயம் அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் மாற்றுவதற்கான திட்டத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்தியாவின் அதானி குழுமத்துடன் தொடர அனுமதியளித்ததாக இலங்கை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், “ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு நாடுகள் பல எம்முடன் இணைந்துள்ளன.
அந்த வகையில் ஆசியாவில் இலங்கைக்கு மிக நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியில், இந்தியா அந்த அநீதியில் ஒத்துழைக்காது என்ற நம்பிக்கை உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது இது இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்த ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்தியா வித்தியாசமானதொரு நடைமுறையை பின்பற்ற தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்டு தேர்தலையும், அதேநேரம் இலங்கையையும் பகைத்துக் கொள்ளா வண்ணம் இந்த நடைமுறையானது அமையும் என குறிப்பிடப்படுகிறது.
அதன்படி இலங்கையால் வழங்கப்படும் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு செவி சாய்க்காது அதேநேரம் இலங்கை – இந்திய உறவில் விரிசல் ஏற்படா வண்ணம், இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாது என்பது தெளிவாக தெரிகின்றது என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014இல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை என்ற நிலையில் 2021இல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.