–தீபச்செல்வன்
ஸ்ரீலங்கா அரசால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைப் போர் குறித்த தீர்மானம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில், அனைத்து மக்களின் நல்லிணக்கத்திற்கும், மனித உரிமைகளுக்கும் ஸ்ரீலங்கா அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள குறித்த தீர்மானம், ‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்ற விதமாக அமைந்தது. இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் என்ற வகையில் இது நிறைவேற்றப்பட்டாலும் இதில் ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதே முக்கியமானது.
ஐக்கிய நாடுகள் சபையில் இதுவரையில் ஸ்ரீலங்கா அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்ரீலங்காவில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்களினால் இந்த தீர்மானங்கள் கால ஓட்டத்தில் தோல்வியை அடைந்திருக்கின்றன. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் மார்ச் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜெனீவா மனித உரிமை பேரவையில் பிரித்தானியா தலைமையிலான நாடுகளினால் ஸ்ரீலங்கா அரசு தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா சபையில் இத் தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. அத்துடன் 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன.
அத்துடன் 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருக்கின்றன. இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த வேண்டும் என்றும் நல்லிணக்கத்தை மீள கொண்டு வரவேண்டும் என்றும் கருதியே தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக பிரிட்டன் கூறுகிறது. எனினும் இந்த தீர்மானம் தம்மீதான அத்துமீறிய அரசியல் தலையீடாகவும் இதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஸ்ரீலங்கா அரசு கூறியிருக்கிறது. அத்துடன் சீனாவும் ரஷ்யாவும் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்திருந்தது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான் கூறியிருந்தது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு இரட்டை நிலைப்பாடு உள்ளது என்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெனீவா தீர்மானத்தில் ஈழத் தமிழ் மக்கள் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்சத்திலேயே அது நாம் கொண்டாடத்தக்க ஒரு தீர்மானமா என்பதை அறிந்து கொள்ள முடியும். ஸ்ரீலங்கா அரசு தீர்மானத்தை எதிர்ப்ப்பதனால் மாத்திரம், அது நமக்கு ஆதரவான, பலன் தருகின்ற தீர்மானம் ஆகிவிடாது.
தமிழீழத்தை எதிர்க்கின்ற ஸ்ரீலங்கா அரசு, 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை நடைமுறைப்படுத்துவதில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்வியும் அது தொடர்பில் இன்றைய ஆட்சியாளர்கள் விடுக்கின்ற கதைகளும் இதற்கு நல்ல வெளிப்பாடு. இதேபோலவே ஸ்ரீலங்கா அரசாங்கம், ஜெனீவாவின் தீர்மானத்தையும் அணுகுகிறது. அதாவது பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் என்ற விடயத்தில் உள்ளக விசாரணையை நடத்துங்கள் என்று ஸ்ரீலங்கா அரசுக்கு ஐ.நா அவை கூறுவது கூட ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது என்றால், ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்படுகின்றது என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதேபோல ஐ.நா கூறுகின்ற எதையும் ஏற்றுக்கொள்ளாத அரசினை வைத்து, இந்த பன்னாட்டு சமூகம் எதனை சாதிக்கப் போகின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் முன் வரைபு வெளியான சமயத்தில், தமிழ் தலைமைகளும் போராடும் மக்களும் சில பரிந்துரைகளை முன் வைத்து போராட்டங்களையும் நடாத்தி இருந்தார்கள். குறிப்பாக ஈழத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன் வைத்த கோரிக்கையும் இங்கே நினைவுபடுத்தத்தக்கது. காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையும் ஐ.நா சபையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என வடக்கு மாகாண சபையும் தமிழ்நாடு சட்டமன்றமும் தீர்மானங்களை இயற்றியிருந்தன. இரண்டு பொதுமக்களின் சபைகளினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது ஐ.நாவின் பொறுப்பாகும். அத்துடன் இனப்படுகொலைக்காக சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும், ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஐ.நாவின் தீர்மானம் ஸ்ரீலங்கா அரசை மயிலிறகால் தடவும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா அரசுக்கும் அது இளைத்த கொடுமைகளுக்கும் அது தொடர்பானவர்களும் பங்கம் விளைவிக்காத வகையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்தை ஈழத் தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும் என பொருள் கொள்ள வேண்டியதல்ல. இனப்படுகொலை்ககான நீதிக்கான செயற்பாட்டில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும், பெரும் படிகளை ஏறி மதிக்க வேண்டும் என்பதை நாம் மறக்க கூடாது. உண்மையில் இத் தீர்மானம், இனப்படுகொலைக்கான நீதி தமதிக்கப்படுகிறதே தவிர, ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்காது. இந்த தீர்மானம் ஸ்ரீலங்கா அரசுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏனெனில் தமிழர்களின் கோரிக்கையை முற்றாக நிராகரித்திருக்கிறது.
ஐ.நா அறிக்கையில் 16 சரத்துக்கள் அல்லது விடயதானங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில ஸ்ரீலங்கா அரசை பாராட்டும் விதமாகவும் அமைந்திருப்பதுடன் விடுதலைப் புலிகள் தொடர்பான எதிரான அல்லது தவறான புரிதல்களை கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்த நிலையில் நடைமுறை பந்தி 6இல் சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஒழுங்கு குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களில்கூட ஐ.நா அறிக்கைகளில் மா்த்திரமின்றி, இலங்கை அரசின் ஆணைக்குழுக்களின் அறிக்கைளில்கூட இடம்பெற்றதாகவும் அதனால் இலங்கை இனப்படுகொலைக்கான நீதியை பெறுகின்ற எந்தவொரு முன்னேற்றமும் நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை உள்ளக விசாரணையை ஒருபோதும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளக்வில்லை. ஏனெனில் உள்ளக விசாரணையை ஸ்ரீலங்கா அரசு ஏற்கவும் இல்லை. நடைமுறைப்படுத்தவும் இல்லை. ஐ.நா மனித உரிமை பேரவையை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் எவ்வாறு உள்ளக விசாரணையை ஐ.நாவால் நடத்துவிக்க முடியும்? அப்படிப் பார்கின்ற போது ஐ.நாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் தீர்மானம், ஐ.நாவுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் தோல்வியாகவே இருக்கிறது.
இத்தகைய ஒரு தீர்மானத்தை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் கொண்டாட முடியாது. இனப்படுகொலைக்கான நீதி என்பது களியாட்டத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் உரியதல்ல. அந்த வழிமுறைகளாலும் அதனை பெற்றுவிட முடியாது. அதற்கேற்ப ஈழத் தமிழினம் போராட வேண்டிய பொறுப்பை கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் ஆதரிக்க வேண்டிய நியாயத்திலும் உறவிலும் உள்ளனர்.