சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு.
(மன்னார் நிருபர்)
(7-07-2021)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு மற்றும் சன்னார் பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படாத அரச காணிகள் பணக்கார்கள் சிலருக்கு வழங்கப்படுவதாக சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக இன்று புதன் கிழமை (7) காலை 10 மணியளவில் மன்னாரில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போது சன்னார் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ராமசாமி ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
நாங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்று வரை பெரியமடு, சன்னார் கிராமத்திலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
நாம் வசிக்கும் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரச காணிகள் இருந்த போதும் எமக்கான அரை ஏக்கர் விவசாய காணிகள் கூட இல்லை.
வாழ்வாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இங்கு ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான அரச காணிகளை சில அரசு அதிகாரிகளோடு சேர்ந்து வசதி படைத்தவர்களும் அபகரித்து வருகின்றனர்.
இந்த செயற்பாட்டுக்கு சில அரச அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.
எமது கிராம பகுதியில் 2011 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்த பின்னர் வடக்கு காணி ஆணையாளர் ஊடாக எமது பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தி இருந்தோம்.
அதற்கு எமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. காரணம் அங்குள்ள பணக்காரர்களுக்கு முன் ஒரு சில அரசு அதிகாரிகள் நிற்கின்றார்கள்.
அந்த அரச அதிகாரிகளால் எங்களுடைய வாழ்வாதாரமும் பிள்ளைகளின் கல்வியும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட்; பதியுதீன் அமைச்சராக இருந்த போது சன்னார் பகுதியில் பல ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அழித்து அங்கு வீடுகள் பாடசாலை வழிபாட்டுத் தலங்கள் , மருத்துவமனை , போன்றவை கட்டிக் கொடுக்கப்பட்டது.
கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் கட்டிடங்களில் இன்று மக்கள் குடியிருப்பு இல்லாமல் ஆடு மாடுகள் காட்டு விலங்குகள் தங்கும் இடங்களாக மாறியுள்ளது.
ஆனால் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வரும் எமது வாழ்வாதாரத்திற்கும் எமது பிள்ளைகளின் எதிர் காலத்திற்காகவும் அரை ஏக்கர் விவசாய காணி தருமாறு நாங்கள் கெஞ்சி கேட்ட போதும் அரச அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரணம் அங்குள்ள ஒரு சில பணக்காரர்களுக்கு காணி உறுதிகள் இருப்பதாக அரசு அதிகாரிகளே கூறுகின்றார்கள்.
தொடர்ச்சியாக இந்த காணிகளில் இருந்து எம்மை விரட்டி அடிப்பதிலேயே பலர் குறியாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதில் குறித்த காணிகள் அபகரிப்பு செய்து கொண்டிருக்கும் சில பணக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தரணி எம்மை அணுகி 15 இலட்சம் ரூபாய் தருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இருப்பவர் ஒரு மாதம் பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அந்த அரச காணிகள் முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு சேர வேண்டியவை. எமது ஏழை விவசாயிகளுக்காக இன்று ஊடகத்தை சந்தித்து அனைத்து விடயங்களையும் தெரிவித்திருக்கும் இந்த நேரத்தில் எமது உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்பதனையும் இங்கு நான் குறிப்பிட்டுகின்றேன்.
பெரியமடு,சன்னார் பகுதியில் அரச காரணிகளாக இருக்கும் அனைத்தையும் அங்கு உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.