ஜெனிவாவை நோக்கி தமிழ் கட்சிகள் கடிதங்களை எழுதுவது புதியது அல்ல. தாயகத்திலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தில் இருந்தும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதில் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்துப் போடுவதும் புதியதுஅல்ல. அவ்வாறு தாங்கள் வைத்த கையெழுத்துக்களை தாங்களே மறுதலிப்பதும் அல்லது ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் வெவ்வேறு அமைப்புகளின் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதும் புதியது அல்ல. கடந்த 12 ஆண்டுகளில் இதுபோன்ற பல கடிதங்கள் அல்லது அறிக்கைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கக்கூடாது என்று கேட்டு கிளம்பு எந்த தமிழ் தரப்புக்கள் சில ஓர் அறிக்கையைத் தயாரித்த அந்த அறிக்கைக்கு நாட்டில் உள்ள சுமார் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தையும் பெற்றன. ஆனால் கட்சித் தலைவர் சம்பந்தர் ஒரு கூட்டத்தை கூட்டி உரமாகப் பேசியதும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு கட்டுப்பட்டு விட்டார்கள். அதன்படி ஜெனிவாக் கூட்டத்தொடரில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை மறைமுகமாக பாதுகாத்தார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தார்கள். அதில் எல்லா கட்சிகளும் ஒத்துழைத்தன. ஒரு கட்டத்தில் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இறுதிக்கட்டத்தில் அதிலிருந்து விலகி விட்டது. அதை தவிர்த்து ஏனைய கட்சிகள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டன. ஆனால் கையெழுத்திட்ட சிறிது காலத்திலேயே கூட்டமைப்பு வவுனியாவில் வைத்து அந்த ஆவணத்தை மறுதலித்தது.
கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின்போதும் மூன்று பெரும் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஒரு கூட்டு கடிதத்தை கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி அனுப்பின.அந்த கடிதத்தில் இலங்கை இனப் பிரச்சினையை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் ஒன்றாக கேட்டிருந்தன. கடந்த 12 ஆண்டுகால தமிழ் அரசியலில் அது ஒரு மகத்தான அடைவு. ஆனால் கடிதம் அனுப்பிய குறுகிய காலத்துக்குள்ளேயே கூட்டமைப்பு குத்துக்கரணம் அடித்தது. ஜெனிவாவில் ஐநா தீர்மானத்துக்கான பூச்சிய வரைவு வெளியிடப்பட்டபோது கூட்டமைப்பு நசிந்து நசிந்து அந்த பூச்சிய வரைபை ஆதரிக்க தொடங்கியது. பூச்சிய வரை பூக்கும் எதிராக ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டுமென்று குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகள் கேட்டபொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் விக்னேஸ்வரனின் கூட்டணியும் சம்மதித்தன. ஆனால் கூட்டமைப்பு பின்வாங்கியது.ஏன் என்றால் ஜெனிவா தீர்மானத்தை இறுதியாக்கும் நடவடிக்கைகளில் கூட்டமைப்பிற்கும் மறைமுகப் பங்களிப்பு இருந்த காரணத்தால் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட முடியாத ஒரு நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டது.அதன்பின் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் 13வது திருத்தம் தொடர்பில் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரத்தவறிய காரணத்தால் அந்த இரண்டாவது கடிதம் அனுப்பப்படவில்லை.
இப்படித்தான் இருக்கிறது தமிழ் கட்சிகள் சேர்ந்து எழுதும் கடிதங்களும் கூட்டறிக்கைகளும். இப்படிப்பட்ட துர்ப்பாக்கியமான சுமார் 12 ஆண்டுகளின் பின்னணியில் மீண்டும் ஐநாவுக்கு கடிதம் எழுதுவதில் கட்சிகளுக்கிடையே குழப்பங்கள் மோதல்கள்
ஏற்பட்டிருக்கின்றன.இந்த மாதம் 14 ஆம் திகதி ஐநா கூட்டத்தொடர் தொடங்குகிறது. கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையர் வாய்மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார். இது தவிர கடந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டபடி சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் செயலகத்தை நிறுவுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும்.
இக்கூட்டத் தொடரையொட்டி ஐநா வை நோக்கி ஒரு கடிதத்தை கூட்டாக எழுதவேண்டும் என்ற முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது. இந்த முயற்சியை ஐநா வை நோக்கி முன்னெடுத்தது என்பதை விடவும் ஏனைய தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் அதன் முன்முயற்சிகளின் ஒரு கட்டமாக அவ்வாறு ஒரு கடிதத்தை தயாரித்தது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகளை முதலில் தொடங்கியது சிவில் சமூகங்கள்தான். கடந்த ஐநாக்கூட்டத் தொடரையொட்டி சிவில் சமூகங்களைச் சேர்ந்த சில அனுசரணையாளர்கள் அதில் முயற்சி செய்து ஒரு கட்டம் வரையிலும் வெற்றி பெற்றார்கள்.அதன்பின் மாவை சேனாதிராஜா சுமார் 10 கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் ஒரு கட்டமைப்பை உருவாக்க போவதாக அறிவித்தார்.
அதற்குரிய சந்திப்புகளும் நடைபெற்றன. அதில் மதத் தலைவர்களையும் அவர் இணைத்திருந்தார். ஆனால் தமிழ் தேசிய பேரவை ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அதை ரசிக்கவில்லை என்று தெரிகிறது. அப்படி ஒரு பேரவையை உருவாக்குவதற்கான மாவை சேனாதிராஜாவின் முயற்சிகளில் சுமந்திரனும் பங்குபற்றினார். எனினும் சம்பந்தர் மாவை சேனாதிராஜாவின் 10 கட்சிக்கூட்டுக்கு ஒத்துழைக்கவில்லை.
மாவை சேனாதிராஜாவின் முயற்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராத ஒரு பின்னணியில்தான் டெலோ இயக்கம் அதை கையில் எடுத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வியக்கத்துக்கு 3 ஆசனங்கள் கிடைத்தன. இந்த மூன்று ஆசனங்கள் காரணமாக அந்த இயக்கத்தின் பேரம் பேசும் தகுதி அதிகரித்திருப்பதாக அந்த இயக்கம் கருதுகிறது. அதன் உத்தியோகபூர்வ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அண்மை மாதங்களாக ஊடகங்களில் அதிகம் வெளித்தெரிகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களோடு ஒத்துப்போகவில்லை.
மாவை சேனாதிராஜாவின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தடைப்பட்டிருந்த ஒரு பின்னணியில் டெலோ இயக்கம் அம்முயற்சிகளை கையில் எடுத்தது. அதன் விளைவாக கடந்த மாதம் 21ஆம் திகதி ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் கட்சித் தலைவர்கள் பங்குபற்றினார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் புளொட் இயக்கமும் சம்பந்தரும் அதில் பங்குபற்றவில்லை. சுமந்திரனும் பங்குபற்றவில்லை. ஏனென்றால் அவர் கட்சித் தலைவர் அல்ல. எனினும் உரையாடலில் ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தா ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார். அதாவது இதில் மாவை எடுக்கும் முடிவுகளை சம்பந்தரும் சுமந்திரனும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தொனிப்பட அவர் கேள்வி எழுப்பினார்.அதைத்தொடர்ந்து இச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சுமந்திரன் அழைக்கப்பட்டார். வழமை போல அவரும் அங்கு இருந்தவர்கள் மத்தியில் முரண்படாமல் தானும் அதற்கு ஒத்துழைப்பது போல ஒரு தோற்றத்தை காட்டியிருகிரார்.
அதேசமயம் தான் ஓர் அறிக்கையை தயாரித்திருப்பதாகவும் ஒரு சிங்கள சிந்தனைக் குளாத்துடன் இணைந்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையை தான் அச்சந்திப்பில் பங்குபற்றிய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதி கூறியுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவர் அதைச் செய்யவில்லை என்று ஏனைய கட்சிகள் கூறுகின்றன. அவரிடம் இருந்து அறிக்கை வராத ஒரு பின்னணியில் 5 கட்சித் தலைவர்களும் தங்களுடைய கடிதத்தை இறுதியாக்கி அனுப்புவது என்று முடிவெடுத்தார்கள். இச்சந்திப்புக்களில் பங்குபற்றிய மாவை சேனாதிராஜா வெள்ளிக்கிழமை பிற்பகல்வரையிலும் அதில் கையொப்பம் இடவில்லை. சம்பந்தரையும் சுமந்திரனையும் மீறி கையெழுத்துப் போடும் துணிச்சல் அவருக்கு இருக்கவில்லை என்று ஏனைய கட்சிகள் நம்புகின்றன. அதேசமயம் சுமந்திரன் தான் ஒப்புக் கொண்ட ஆவணத்தை வெள்ளி இரவுதான் அனுப்பியிருக்கிறார்.
அதிலிருந்த ஒரு சில பகுதிகளை ஏனைய கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். குறிப்பாக அதில் முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனவாம். அதில் இருதரப்பும் இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறப்பட்டுள்ளது.அதை ஐநா கூறுவது வேறு. தமிழ்த் தரப்பு கூறுவது வேறு என்று கூறி 5கட்சித் தலைவர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முடிவில் தாங்கள் ஏற்கனவே தயாரித்த கடிதத்தில் கையெழுத்திட்டு அதை கடந்த சனிக்கிழமை பகல் ஐநாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இவ்வாறு கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் தனியாக ஒரு கடிதத்தை கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகளோடு இணைந்து அனுப்பியமை என்பது கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் எழுதக் காரணமாக அமைந்தது. ஆனாலும் சம்பந்தர் இதுவிடயத்தில் பக்குவமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. அந்தக் கடிதத்தை காரணமாக வைத்து கூட்டமைப்பு பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சுமந்திரன் தயாரித்த கடிதத்தை சம்பந்தர் கூட்டமைப்பின் பெயராலேயே அனுப்பியுள்ளார்.ஆனால் பிரயோக அர்த்தத்தில் அது தமிழரசுக்கட்சியின் கடிதம்தான். அதில் ஏனைய பங்காளிக் கட்சிகள் பங்குபற்றவில்லை.எனினும் சம்பந்தர் கூட்டமைப்பு உடையக் கூடாது என்று முன்னெச்சரிக்கையோடு அதை கூட்டமைப்பின் கடிதமாக அனுப்ப வேண்டும் என்று கேட்டதாக தகவல்.
இது விடயத்தில் சம்பந்தருக்கு தெரியும் பங்காளிக் கட்சிகள் அவ்வளவு இலகுவாக கூட்டமைப்பு உடைத்துக் கொண்டு வெளியே வரமாட்டார்கள் என்று. ஏனென்றால் அப்படி வெளியேறினால் தோற்கக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும் என்று அவர் நம்புகிறார். அதேசமயம் கட்சிகளும் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளிவரத் தயார் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறியவர்கள் வெல்ல முடியாது என்ற மாயை கடந்த பொதுத்தேர்தலின்போது உடைக்கப்பட்டுவிட்டது. மட்டக்களப்பில் வியாழேந்திரனும் யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் விக்னேஸ்வரனும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.எனவே கூட்டமைப்பை ஒரு ஐக்கிய முன்னணியாக பேண வேண்டிய தேவை சம்பந்தருக்கும் உண்டு.பங்காளிக் கட்சிகளுக்கும் உண்டு. அந்த அடிப்படையில்தான் கூட்டமைப்பு உடைவது தடுக்கப்பட்டிருக்கிறதா?
இருக்கலாம். ஆனால் இந்தக்கடிதங்கள் விவகாரத்தில் அதிகம் பலவீனமடைந்தது மாவை சேனாதிராஜாதான். தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மூத்த கட்சி ஆகிய தமிழரசுக்கட்சி ஒரு பொருத்தமான தலைவர் இன்றி தடுமாறுவதை அது காட்டுகிறதா? துணிந்து முடிவெடுக்க முடியாத ஒரு தலைவராக மாவை காணப்படுகிறார். அதேசமயம் சம்பந்தரும் பங்காளிக் கட்சிகளை அரவணைத்து தலைமைத்துவத்தை உறுதியாக நிலைநாட்ட முடியாதவராகக் காணப்படுகிறார். இரண்டு கடிதங்கள் வெளிவந்தமை என்பது சம்பந்தரின் தோல்விதான்.இதுவிடயத்தில் சம்பந்தரின் தலைமைத்துவமும் கேள்விக்குள்ளாகிறது மாவையின் தலைமைத்துவமும்
கேள்விக்குள்ளாகிறது. ஆனால் தமிழ் மக்ககளோ அவிழ்த்த பாக்கு மூட்டை போல தொடர்ந்தும் சிதறிக் கொண்டே போகிறார்கள்?