சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராணுவமும், துணை ராணுவப் படையான அதிவிரைவு ஆதரவுப் படையும் இணைந்து ராணுவப் புரட்சியை மேற்கொண்டன. இந்நிலையில், மீண்டும் மக்களாட்சியை கொண்டுவருவது தொடர்பாக இரு படைகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சனிக்கிழமை முதல் இரு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
தலைநகர் கர்ட்டூம் மற்றும் அதனையொட்டி ஓம்டுர்மான் நகரங்களில் மூன்றாவது நாளாக நேற்று சண்டை நடைபெற்றது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக அதிவிரைவுப் படை கமாண்டர் தகாலோ கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ தளபதி அல்-புர்கான் குற்றம்சாட்டியுள்ளார். துணை ராணுவப் படையை கலைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், தொடர் சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180-ஐக் கடந்துள்ளதாக சூடானுக்கான ஐநா சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். மேலும், ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியர் ஒருவரும் உயிரிழந்த நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.