அமெரிக்காவில் வாழும் மக்களிடையே நிற வெறி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் ஆகிய இரண்டும் மிகப்பெரும் பிரச்னையாக தற்போது உள்ளன. அந்நாட்டில் பல மாகாணங்களில் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகள் மற்றும் நிற வெறி தாக்குதல்கள் தற்போது சர்வசாதாரணமான முறை நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் கனாஸ் சிட்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ரால்ப் யார்ல். கறுப்பினத்தவரான இச்சிறுவன், உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவர் ஆவார். இவருக்கு இளைய சகோதரர் உள்ள நிலையில, அவர் கடந்த வியாழக்கிழமை தனது நண்பரை பார்க்க பக்கது ஏரியாவுக்கு சென்றுள்ளார்.
தனது தம்பியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அந்த பகுதிக்கு சிறுவன் ரால்ப் சென்றுள்ளார். அப்போது விலாசம் மாறி வேறு ஒரு வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தி அழைத்துள்ளார். அந்த வீட்டில் இருந்தவர் அன்ட்ரூ லெஸ்டர் என்ற 84 வயது முதியவர். அவர் கதவை திறந்த போது தான் வேறு இடத்திற்கு மாறி வந்துவிட்டோம் என்று சிறுவன் ரால்ப்பிற்கு தெரியவந்துள்ளது. ஆனால், சிறுவன் தவறுதலாக அங்கு வந்தது முதியவர் ஆன்ட்ரூவுக்கு ஆத்திரமூட்டிய நிலையில், தன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவன் ரால்பை சுட்டுள்ளார்.
இதில் சிறுவன் ரால்ப்பின் தலை மற்றும் கை பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கறுப்பின மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் துப்பாக்கி சூடு நடத்திய முதியவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று 24 மணிநேரத்தில் விடுவித்தது.
பின்னர், போராட்டம் வலுபெறவே அவருக்கு எதிராக தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நீதி வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் யார்ல் இடம் அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேசி நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.