கதிரோட்டம்
07-07–2023 வெள்ளிக்கிழமை
இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்கவென ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் குழும்ப வாரிசான செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக ரணில் விக்கிரமசிங்க நியமனம் செய்தமை தமிழ் மக்கள் வரவேற்ற ஒரு விடயமாக இருந்தது.
மலையக மக்களின் பிரதிநிதி ஒருவர் கிழக்கு மாகாணத்தின் மக்களின் நலன்களைக் கவனிக்க வந்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் புட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்ந்து வருகையில் செந்தில் தொண்டமான் அந்த மக்களின் தேவைகளைக் கவனிக்கும் ஒரு கவனராக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை துளிர்த்து நின்றது.
ஆனால் பதவியேற்று சில மாதங்களிலேயே அவர் தான் கல்வி கற்ற தமிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ள சில அரசியல்வாதிகளைச் சந்தித்து பின்னர் கருணாநிதியின் பேரன் உதயநிதியைச் சந்தித்து வந்தார்.
அவர் ஆளுனராகப் பதவி வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் எவ்வளவோ பணிகள் காத்துக்கிடக்க தன் அலுவலகத்திற்கு வந்த உடனேயே கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை கிழக்கு மாகாணத்தில் கொண்டாட உள்ளதாக அறவிப்பு ஒன்றை விடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு ஆளுனர் பதவியை ரணில் வழங்கினாரா என்று மக்கள் கிழக்கில் கேள்விகளை தொடுத்த வண்ணம் உள்ளார்.
செந்தில் தொண்டமான் தான் சார்ந்த மலையகத்தில் சில அரசியல் பதவிகளை வகித்தவர். என்பது அனைவருக்கும் தெரியும். மலையக தோட்டத் தொழிலாளர்களில் முக்கால்வாசிப் பேர் தங்கள் வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு ஊதியம் அற்றவர்களாக உள்ளார்கள் என்பது அவருக்குத் தெரியும். தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் தங்களை வளர்த்துக் கொண்டு மந்திரிப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு கொழும்பு வாசிகள் வாழ்ந்து வருகின்ற அவர்களுக்கு தங்கள் சொந்த மலையக மக்களின் துயர் துடைக்கும் வழிகள் தெரியவில்லை.
தற்போது மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் காற்று மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டப் புற மக்கள் வசித்த வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில் திண்டாடுகின்றார்கள்.
கிழக்கில் பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்து துன்பத்தில் நிழலிலேயே வாழ்ந்து வரும் மக்களின் துயர் செந்தில் தொண்டமானுக்கு புரியவில்லை.
தனக்கு முன்னாள் காத்துக்கிடக்கும் மக்கள் பணிகளை மறந்து விட்டு தமிழகத்தின் கருணாநிதி குடும்பத்தின் நட்பைப் பெற்றுக்கொள்வதற்காக அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் எண்ணம் அவரிடத்தில் உதித்துள்ளது. செந்தில் தொண்டமான். கருணாநிதிக்கு கிழக்கு மாகாணத்தில் நூற்றாண்டு விழா எடுக்க விருப்பம் தெரிவித்தமைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் அறிக்கைகள் வெளியிட்டு;ள்ளார்கள் இது தொடர்பில் அவர்கள் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய விழாவை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை வெளியிடடுள்ளார்கள்;.
அத்துடன். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கடந்த பல சகாப்தங்களாக இனப்படுகொலைகளுக்கு உள்ளான போதெல்லாம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்காமல் இருந்ததோடு மட்டுமல்ல இறுதி யுத்தத்தின் பின்னர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி இலங்கைக்குச் சென்று மகிந்த ரரிபக்சாவைச் சந்தித்து பரிசுகளையும் பெற்றுச் சென்றவர் என்பதையும் கிழக்கு மாகாண மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள்
2009, மே,18 அன்று முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற அதுவரையிலும் வடக்கு கிழக்கு தமிழர்கள் பல இலட்சம் மக்கள் மாண்டபோதும் முதலமைச்சர் கருணாநிதிக்கு போரை நிறுத்தவோ, தமிழ்மக்களை காப்பாற்றவோ எண்ணம் எழவில்லை என்ற ஒரு கோபம் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு’ என்றும் மேற்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாகத் தெரிவித்து;ளளார்கள்.
எனவே கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கருணாநிதிக்கு விழா எடுப்பதைத் தவிர்த்து விழுந்து கிடக்கும் கிழக்கின் மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இவ்வாரக் கதிரோட்டத்தில் நாம் பதிவு செய்கின்றோம்.