கர்நாடகத்தின் ஹாசன் தொகுதிஎம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவைத் தொகுதியிலிருந்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களோடு உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல்தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ, போலி என கூறியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனிக்கு தப்பி ஓடி விட்டார்.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் எனமாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடித் தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களைக் கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.