மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே 7) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களின் முரணை சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
“2024 மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” எனக் குறிப்பிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவற்றுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது பேசு பொருளாக மாறியது. குறிப்பாக முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தாமதமாக வெளியிட்ட தரவுகளிலும் தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன. இந்நிலையில், இத்தகைய முரண்பாடுகள் கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் முரண்பாடுகள் இருக்கின்றன. வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான நம்பகத் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுகின்றன. 2024 மக்களவை தேர்தல் ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம். எனது 52 ஆண்டுகால தேர்தல் வாழ்வில், இறுதி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை நான் பார்த்ததில்லை.
எங்கள் ஒரே நோக்கம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதே. இத்தகைய முரண்பாடுகளுக்கு எதிராக நாம் கூட்டாகவும், ஒற்றுமையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் குரல் எழுப்ப வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியும் பாஜகவும் முதல் இரண்டு கட்ட தேர்தலிலேயே படபடப்பும் விரக்தியும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வோம்.”
இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மேலும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
இன்று நடந்த மூன்றாம் கட்டத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் கார்கே, கர்நாடக மாநிலம் குல்பர்காவில்வாக்களித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில், “இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம். இந்தச் சூழலில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டுப் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.