டி.கே.சேட்டன் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது. தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதுதொடர்பான ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல் பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையை விவரிக்கிறது. இந்த நிலைமையைத் தடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவை என்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது. இந்த திரைப்படம் உருவானதற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர் சாகர் பி ஷிண்டே கூறுகையில், “நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய, பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை கூறுகிறது. விவசாயத்தில் ரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, அது மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்துடன் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அலட்சியத்தால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அத்துடன் அதிகாரமிக்க நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது” என்றார். காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படே உடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளது.


















