பத்தரமுல்ல சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கின்றார்!
தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது, எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அரிசி விநியோகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அரச ஊழியர்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கு இந்த அரசுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது போலும். இவ்வாறான பைத்தியக்காரத்தனம் உலகத்தில் எங்குமே இல்லை.
அழகான, தூய்மையான, பெரும் பணக்கார இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்தவர்கள், இன்று அரச ஊழியர்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கவா நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்? தற்போது நாடு அவ்வாறான நிலையை அடைந்துள்ளதா? அவ்வாறாயின் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணங்கள் எங்கே? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் ஏனைய கடன் உதவிகள் மூலமும் பெறப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? அவை எதற்கும் இந்த அரசிடம் பதில் இல்லை.
அரசுக்கு அரச ஊழியர்களின் பசியைப் பற்றி மாத்திரமே கவலை உள்ளது. ஏழைக் கிராமங்களில் வாழும் ஏனைய மக்களுக்குப் பசி இல்லையா? அவர்கள் உணவு உண்பதில்லையா? அல்லது அவர்கள் புண்ணாக்கா உண்கின்றார்கள்? அரச ஊழியர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த அரிசிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரச ஊழியர்கள் அந்தளவுக்குப் பிச்சைக்காரர்கள் அல்லர், ஆனால் இந்த அரசு அவர்களைக் கையேந்திப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஏழைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கோ அல்லது விவசாயிகளிடமிருந்து நெல்லை முறையான விலைக்குக் கொள்வனவு செய்வதற்கோ அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு உடனடியாக மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கிப் போராடுவது நிச்சயம். அன்று கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குப் போகுமாறு கூறியதைப் போல், அநுரகுமார திஸாநாயக்கவையும் வீட்டுக்குப் போகுமாறு கூறி மக்கள் வீதிக்கு இறங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – என்றார்.


















