உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில், டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு ரஷியா தாக்கியது. இதில், 74 ஏவுகணைகளும், 496 டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. ஏறக்குறைய 11 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில், கீவ் நகரில் 21 பேர் பலியானார்கள். 90 பேர் காயமடைந்தனர். உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி அளித்துள்ளது. இதுபற்றி ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நீண்ட ரக ஏவுகணைகளை கொண்டு சமீபத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலால், ரஷியாவில் கடுமையாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதிபர் புதினுக்கும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி தரப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


















