பு.கஜிந்தன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு நீங்களும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார்.
நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஒரு தனிக்கட்சி. அவர் யாரை ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவிப்பது அவருடைய சுதந்திரம்.
நாம் அப்படியான முடிவுகள் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் சந்தித்தது எமது மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பதற்கும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அவருடைய அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்குமாகவே. மாறாக அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கு நாம் தெளிவாக தெரிவித்தோம்.
இவ்வாறு ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாகத் தெரிவித்தன.