கதிரோட்டம் 13-11-2020
திடீரென ஒரு சில வாரங்களில், உலகை ஆட்டம் காண வைத்த கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. இலங்கை இந்தியா அமெரிக்கா கனடா என்று நாடுகளின் பெயர்களை நாம் அடுக்கிக் கொண்டு போகின்றபோது உலகின் அனைத்து நாடுகளிலும் எமது தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்த வண்ணம் உள்ளோம்.
அமெரிக்காவில் ட்ரம்பின் ‘தாண்டவத்தையும்’ தாண்டி கொரோனாவானது தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. அங்கு மரணங்கள் தொடர்கின்றன. இந்தியாவும் அதற்குள் அடங்குகின்ற தமிழ்நாட்டிலும் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டு நண்பர்களோடு உரையாடுகையில் “தமிழ்நாடு அரசாங்கம் மக்களை கைவிட்டு விட்டது” என்று சொல்லுகின்ற அளவிற்கு அங்கு கொரோனாவைக் கையாளும் விதம் மாறியிருக்கின்றது என்று உணரலாம்.
கனடாவிலும் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா தொடர்பான ‘கலக்கம்’ தான் அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை அதிர்ச்சி வைத்தியம் பார்க்கத் தொடங்கியுள்ளது. பல மாகாணங்கள் தடுமாறுகின்ற அளவிற்கு கொரோனா நாடுகளையும் நகரங்களையும் நடுத்தெருவிற்கு கொண்டு செல்லப்போகின்றதோ என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.
இலங்கையிலும் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்தும் தொற்றாளர்கள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டும் அங்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் நடுங்கத் தொடங்கியுள்ளார்கள்
இப்போது உலக நாடுகள் “கொரோனாவினால் எழுந்துள்ள மருத்துவப் பிரச்;சனைகளை மட்டுமல்ல, கொரோனாவினால் பூதாகரமாக எழுந்து நிற்கும் பொருளாதார பின்னடைவுகளைப் பற்றியும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. பல உலக நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வைத்திருப்பதா அல்லது மக்களை சமூக முடக்கம் என்பதன் பேரில் தொடர்ச்சியாக வீட்டுக்குள் வைத்திருப்பதா அல்லது எது வந்தாலும் பரவாயில்லை கட்டு;ப்பாடுகளைத் தளர்த்தி உயிரிழப்புகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம் என்றும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன என்பதையும் செய்திகள் வாயிலாக அறிகின்றோம்.
எத்தனை காலத்துக்கு தொடர முடியும் என்ற கேள்விகளுக்கு அப்பால் தீவிரமாக சிந்தித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. வினா இங்கே தான் எழுகின்றது. மக்களை வீடுகளுக்குள் தொடர்ச்சியாக முடக்கி வைத்தால் அவர்களின் குடும்ப பொருளாதாரம் என்னவாகப் போகின்றது? அன்றாடம் தொழில் செய்து கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு சீவனோபாயம் நடத்துகின்ற குடும்பங்களின் கதி என்ன? அதேசமயம் அரசாங்க திணைக்களங்கள் அத்தனையும் முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்படுமானால் நாட்டின் நிர்வாக இயந்திரம் இயங்குவது எவ்வாறு? அரசுக்குக் கிடைக்கின்ற வருமானங்கள் இழக்கப்படுவதால் ஏற்படப் போகின்ற பாதிப்புகளை எத்தனை நாட்களுக்கு சமாளித்தபடி செல்ல முடியும்? அரசுக்கான வருமானம் குன்றும் பட்சத்தில் மக்களுக்கான சேவைகளை எவ்வாறு தங்குதடையின்றி வழங்க முடியும்? இந்த விடயமானது உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானதாக மாறிவிட்டது.
இவ்வாறு பார்க்கின்ற போது, இனி வரப்போகின்ற நாட்கள் உலக நாடுகள் அனைத்திற்கும் சவால்கள் நிறைந்தவையாகவே இருக்கப்போகின்றன என்பதையே இடம்பெறுகின்ற நகர்வுகள் காட்டி நிற்கின்றன.