பு.கஜிந்தன்
குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக
இளையோர் மன்ற மகிமை அங்கத்தவரும் பி ஆர் கடல் உணவு வாணிப உரிமையாளருமான திரு பிலுப்புராசா றெக்ஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக மகளீர் மன்ற மகிமை அங்கத்தவரும் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி ஜெரால்டின் ரகுநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கலைவிழாவில் தெற்காசிய 20வயது உதைபந்தாட்ட தொடரில் விளையாடிய குருநகரை சேர்ந்த செல்வன் ஜோன் ஜிம்றோன் கரிஷ் மற்றும் செல்வன் ரூபன் மதுமிதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு அவுஸ்திரேலியா கிறிபித் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறை உயர் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்ற செல்வி ஜெயக்குமார் சமந்தா தாரணி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு 2023 உயர்தரப்பரீசைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய 12குருநகரை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளையோர் மன்ற முன்னைநாள் தலைவர்கள், சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்வுகளாக
ஆசிரியை திருமதி சுதர்சினி கரண்சனின் நெறியாள்கையில் உருவான. தில்லானா நடனமும், யூபிலி ஆண்டில் இறை திட்டம் தேடும் இளையோர் எனும் தலைப்பில் வில்லுப்பாட்டும், ஆசிரிய ஆலோசகர் ஜோண்சன் ராஜ் குமார் அவர்களது எழுத்தில் உருவானதும் ,கலை நிறைச்செல்வன் திரு அரியநாயகம் அன்றுயூலியஸ் அவர்களின் நெறியாள்கையிலும் உருவானதுமான விண்ணக வீரன் வடமோடிக்கூத்தும் மேடை ஏற்றப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் விருந்தினர்கள், பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றினர்.