சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதேபோல், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், அங்கு பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி, அங்கு 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்களை இருப்பதை கண்டறிந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்சிஜன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.