காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை என கூறி வந்த பாகிஸ்தான், பின்னர் தாக்குதல் தொடர்பான நடுநிலையான விசாரணைக்கு தயார் என கூறியிருந்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை சர்வதேச நாடுகள் நடத்த வேண்டும் என தற்போது அந்த நாடு கூறியுள்ளது.
இது குறித்து ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி குவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், ‘இந்த நெருக்கடியில் ரஷியா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் ஒரு மிகமிக நேர்மறையான பங்களிப்பை செய்ய முடியும் என நினைக்கிறேன். அவர்கள் ஒரு விசாரணைக்குழுவை கூட அமைத்து இது குறித்து விசாரணை நடத்தலாம். இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறார்களா அல்லது உண்மை கூறுகிறார்களா? என்பதை ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்’ என தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதல் குறித்த வெற்று பேச்சுகளும், அறிக்கைகளும் எந்த பலனும் தராது எனக்கூறிய அவர், அதன் பின்னணில் இருப்பவர்களை கண்டுபிடிப்போம் எனவும் கூறினார்.