கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அதை போராக கருதுவோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இந்திய – பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா கூறியிருப்பதாவது: இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
