மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(30-04-2025)
மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் 30ம் திகதி புதன்கிழமையன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப் பின்றிய நிலையில் காணப்பட்ட நிலையில் குறித்த வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை என மன்னார் போக்குவரத்து சாலை தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்ட காலங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு கண்டி போன்ற தூர பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த பேருந்துகளை மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்
மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும், அதே நேரம் பழுதடைந்துள்ள பேருந்துகளை மீள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உதிரிபாகங்கள் விரைவில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அவற்றில் ஐந்து திருத்தப்பட்ட இஞ்சின்கள் விரைவில் மன்னார் போக்குவரத்து சாலைக்கு கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரம் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது போக்குவரத்து சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல கோடி பெறுமதியான அரச சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைக்கான காரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் அடிப்படை விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகும் பொது போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தார்.
மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் மன்னார் போக்குவரத்து சாலையில் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் நிலை தொடர்பிலும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேருந்து சாலையின் நிலை தொடர்பாக பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.