ந.லோகதயாளன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் 260 ஏக்கர் கடல் அட்டைப் பண்ணைகளில் 51 ஏக்கர் கடல் அட்டைப் பண்ணைகள் அனுமதி இன்றி இயங்குவது கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் தற்போது 1080 ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டைப் பண்ணைகள் இயங்குகின்றன என அரச திணைக்களம் உத்தியோகபூர்வமாக கூறினாலும் அனுமதியின்றியும் பல பண்ணைகள் இயங்குகின்றன. வடக்கில் இயங்கும் கடல் அட்டைப் பண்ணைகளிற்காக வருடாந்தம் சுமார் 45 லட்சம் கடல் அட்டை குஞ்சுகள் தேவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
45 லட்சம் குஞ்சுகளையும. உற்பத்தி செய்ய 3 உற்பத்திப் பண்ணைகள் அல்லைப்பிட்டி,
நாவந்துறை, மன்னார் திணைக்களம் ஆகிய இடங்களில் இயங்குவதோடு புதிதாக
அல்லைப்பிட்டியில் 4 வது பண்ணையும் அமைக்கப்படுகின்றது. இவை ஒவ்வொன்றிரும் மாதாந்தம் 40 ஆயிரம் குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும். வடக்கில் உள்ள 1080 ஏக்கர் கடல் அட்டைப் பண்ணைகளும் முழுமையாக செயல்படுவதானால் குஞ்சு உற்பத்திப் பண்ணைகள் குறைந்தது 6 பண்ணைகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியில் இயங்கும் தனியார் பண்ணையில் 2024 ஆம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரம் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கர் பண்ணைக்கு வருடம்தோறும் 4 ஆயிரம் குஞ்சுள் வேண்டும். தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 680 பண்ணைகளும், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் 88, நாச்சிக்குடாவில் 67, கிராஞ்சியில் 54 பண்ணைகளும் சட்டபூர்வ அனுமதியோடு இயங்குகின்றது. அனுமதிகள் இன்றி மேலதிகமாக 51 ஏக்கர் என மொத்தம் 260 பண்ணைகள் உள்ளது. இவ்வாறே
மன்னார் மாவட்டத்திலும் 130 ஏக்கர் பண்ணைகள் உள்ளது.
கிளிநொச்சியில் அத்துமீறி ஓர் ஆண்டாக அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைகள் தொடர்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நெக்டா மற்றெம் பிரதேச செயலகம் என்பவற்றிற்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதிகாரம்கொண்ட நிறுவனங்களில் பிரதேச செயலகங்கள் முதலில் எழுத்தில் அறிவித்து அதன் பின்பு எச்சரிக்கை அறிவித்தல் காட்சிப் படுத்திய பின்பே வழக்கிட முடியும் எனவும், கரையோரப் பாதுகாப்பு நிறுவனம் நேரடியாக வழக்குத் தாக்கல் செய்யவும் நெக்டா நிறுவனமானது எந்தவொரு அறிவித்தலோ அல்லது சட்ட நடவடிக்கை இன்றி அனைத்தையும் எந்தவேளையும. அகற்றும் அதிகாரம்கொண்டபோதும் அனைவரும் மௌனம் காப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளூர் மீனவர்களின் குற்றச் சாட்டுத் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 52 பேர் அனுமதி இன்றி கடல் அட்டைப் பண்ணை அமைத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டு அதில் 49 பேருக்கு எதிராக முன் அறிவித்தல் படிவம் (அ படிவம்) விநியோகிக்கப்பட்டு அறிவித்தரும் ஒட்டப்பட்டுவிட்டது. இவர்களிற்கு எதிராக யூன் மாதத்திற்கு முன்பு வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதேநேரம் முழு அதிகாரம்கொண்ட நெக்டா நிறுவனம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அதன் யாழ்ப்பாணம் இணைப்பாளர் நிரூபராஜ்சை தொடர்புகொண்டு கேட்டபோது,
நாமும் சகல விபரங்களையும் சேகரித்து உரிமையாளர்களையும் இனம் கண்டுகொண்டோம் அடுத்த மாதம் நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் கடல் அட்டைப் பண்ணை தொடர்பில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் வடமாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி அன்னராசாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
இரண்டு ஆண்டுகளாக சட்ட விரோதமாக அரசிற்கு சேரவேண்டிய குத்தகைப் பணத்தைக்கூட செலுத்தாமல் இயங்கும்போது தூங்கிய அதிகாரிகள் அவர்கள் போட்ட கடல் அட்டைப் பண்ணைகளின் அட்டை வளர்ச்சி அடைந்து சந்தைப்படுத்தி இலாபமீட்டிய பின்பு ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார்