பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைக்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதில் பிரான்சின் உறுதியான செய்திக்கு நன்றி தெரிவித்தேன்’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர், ‘எங்கள் உரையாடல் அனைத்தும் நமது மூலோபாய நட்பின் நம்பிக்கை, ஆறுதல் மற்றும் லட்சியத்தை பிரதிபலித்தன’ என்றும் கூறியிருந்தார். முன்னதாக பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
