சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம்’ என்ற பிரசார நடைபயணம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. பா.ஜ.க. மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி எப்படி அழைக்கிறார் என்று தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் வாக்குகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் கணிசமாக பெறுவார். அந்த வகையில் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெறும் அளவிற்கு கிடைக்குமா? என்பதை என்னால் கணித்து சொல்ல முடியாது. அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான். காமராஜர் குறித்த சர்ச்சை தற்போது தேவையற்றது. முதலமைச்சர், திருச்சி சிவா உள்ளிட்டோர் அந்த விமர்சனம் தொடர்பாக போதிய விளக்கம் கொடுத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
























