பு.கஜிந்தன்
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி, உள்ளூர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மீனவர்கள்!
யாழ். வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட மீனவர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய தீனவர்களது இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.
இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறன. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல்ப் போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக இந்திய மீனவர்களது இழுவைப்படகுளின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறை பகுதி கடற்றொழிலாளர்களது வலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த இலங்கையின் மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
























