தென்காசி மாவட்டம், அய்யாபுரம், அருள்மிகு தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 32வது ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த அக்டோபர் 06, 07 மற்றும் 08 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னதாக 10 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இத்திருவிழாவில் பெருந்திரளான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 வது தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு மூன்று நாள் சிகர நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
முதல் சிகர நிகழ்வான அக்டோபர் 6ஆம் திகதி மாலையில் தீச்சட்டி மற்றும் தீச்சட்டி காவடி ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து தமிழ் பாரம்பரிய கரகாட்டம் அரங்கேறியது.
சிகர நிகழ்வான இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறை பக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்த நன்கொடையாளர்களின் உதவியுடன் மதிய அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 04:30மணியளவில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து குற்றால தீர்த்தம் தொடங்கபெற்று சுமார் 6மணி நேரம் ஊர் முழுவதும் வலம் வந்து இரவு 10:30மணியளவில் அன்னை தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று, நள்ளிரவு 21அடி நீளம் கொண்ட பூக்குழி அமைத்து அக்கினி வளர்க்கப்பட்டது.
மூன்றாவது நாளான அக்டோபர் 8, அதிகாலை 6 மணியளவில் நாதஸ்வர நையாண்டி மேளம் முழங்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மக்கள் வெள்ளத்தில் 32வது ஆண்டு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பூக்குழியினை காண வரும் பக்தர்களுக்கு வசதிக்காகவும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக கோவில் நுழைவாயிலில் அகண்ட LED திரை நிறுவப்பெற்றது.
பின்னர் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துதல், முளைப்பாரி கரைத்தல் அதனை தொடர்ந்து மஞ்சள் பால் விளையாட்டு நடைபெற்று தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு முன்னதாக அன்னை ஸ்ரீமாரியம்மனும், மகன் ஸ்ரீ பைரவரும் பக்த மெய் அன்பர்களுக்கு கணி வழங்கி அருள் புரிவர். விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவினை சிறப்பிக்கும் வகையில் கொக்கிரகுளம் மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சியும், குத்துக்கல்வலசை திருமலைக்குமார் நையாண்டி மேளமும் அரங்கேறியது.
இந்த மூன்று (06, 07 மற்றும் 08) நாள் திருவிழா ஏற்பாடுகளை காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ முதல் உதவி குழு ஏற்பாடுகள் கூடுதல் சிறப்பு.
மேலும் சிறப்பாக 5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சித்திரை மாதத்திலும், மகன் ஸ்ரீ வைரவர்க்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : கார்த்திகேயன்.
புகைப்படம் : சரவணன், விக்ரமன்.
























