பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கொட்டடி மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முத்தரப்பு சந்திப்பு ஒன்று இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.
பருத்தித்துறை நகர சபைத்தலைவர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை , உப தவிசாளர், கொட்டடி மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடையே இந்த கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில், கொட்டடி மீனவர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிக்கின்ற இடத்தில் மீன்பிடி துறை அகழும்போது குவிக்கப்பட்ட மணல்மண்ணை கொட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற முத்தரப்பு உரையாடலை அடுத்து பருத்தித்துறை கொட்டடியில் துறை அகழ்ந்த இடத்தை பார்வையிட்ட கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், பருத்தித்துறை நகர சபை அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சின் தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் குறித்த துறையை அகழ்ந்து மண்ண கொட்டுவதற்குரிய இடத்தினை அடையாளப்படுத்தினர்.
அகழப்பட்ட மண் அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம் திகதி திங்கட்கிழமை கொட்டடி மீனவர்கள் பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
























