யூத மதத்தினரின் தீபத்திருநாள் பண்டிகையான ஹனுக்கா பண்டிகை 8 நாட்கள் நடைபெறும். இந்த பண்டிகையின் முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் யூதர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அருகே ஹனுக்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிட்னி பகுதியை சேர்ந்த ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், ஹனுக்கா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த இரு பயங்கரவாதிகள் அங்கு இருந்த யூதர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் மற்றொரு பயங்கரவாதி படுகாயமடைந்தான். அதேவேளை யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 40 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
























