அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. தவிரவும், வான், கடல் வழி பயணங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஈரான் நாட்டின் இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, ஈராக் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை ஈரான் ஊடகம் தெரிவிக்கின்றது. ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஈராக்கின் வடக்கே உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது டிரோன்கள் தாக்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
























