நைஜீரியாவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் தெற்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வடக்கே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். எனினும், ஆயுதமேந்திய கும்பல் கிராமத்திற்குள் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுடுவதும், அவர்களை பிடித்து வைத்தும், கடத்தி சென்றும் பணய தொகை கேட்டு மிரட்டுவதும் நடந்து வருகிறது. அப்படி தராதபோது, அவர்களை படுகொலை செய்து விடுகிறது. மத பாகுபாடின்றி இந்த படுகொலைகள் நடந்து வருகின்றன. இதுதவிர, சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபடுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், ஜம்பாரா மாகாணத்தின் கொரோன் நமயே பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த விவசாயிகளை நோக்கி, துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை சுட்டு தள்ளியது. இந்த சம்பவத்தில், 17 விவசாயிகள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில், ஜம்பாரா மாகாணத்தின் தலடா மபாரா பகுதியில் வழக்கம்போல் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தபோது, விவசாயிகள் சிலரை ஆயுதமேந்திய கும்பல் திடீரென துப்பாக்கிகளால் சுட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர் பலியானார்கள். இதன்பின்னர் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு நிர்வாகம் உறுதி அளித்தபோதும், வன்முறை தொடர்ந்து வருகிறது.


















