பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி வைரமுத்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் இருக்கும் காட்ரோட்டில் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, இமயத்தைப் புதைத்த இடம் இதுதான் தூங்கு ராஜா தூங்கு
ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில் கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள் மண்ணை இழுத்துப் போர்த்துப் படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது நலம் கேட்க வந்த நான் நல்லசெய்தி கொண்டுவரவில்லை இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன் உனைத்தேடி வந்துவிட்டான்
ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர் கடமை இருக்கிறது இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன் முதலமைச்சர் விஜயைச்
சந்திக்கவும் தயங்கமாட்டேன் இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















