கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடக்கப் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிறுவனரும் அதே பேருந்தில் இருந்த நிலையில், அவரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்து, உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைந்துள்ள கிங் டேவிட் ஜூனியர் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமானது. மாணவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள சிபி நீர்வீழ்ச்சிக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்று, பாறை ஒன்றின் மீது மோதி கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


















