அம்பேத்கரை தன்னுடைய தலைவர் என்று போற்றியவர் பெரியாரென அமைச்சர் வன்னியரசு கூறினார். இது தொடர்பாக, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்து நான் உரையாற்றியபோது, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றிக்கு பாடாற்றிய திமுக உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கு நன்றி கூறினேன். அப்போது, “நாங்கள் மட்டுமே நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்; திமுக தரப்பிலிருந்து நன்றி சொல்லவே இல்லை” என்று சொன்னேன். அது ஒரு விளையாட்டாக சொன்னது தான். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டென எழுந்து பேசினார். “எங்களுடைய தலைவருக்கும் திருமாவளவனுக்கும் இருப்பது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என முன்பும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்” -என்றார். அப்படி அவர் மனம் திறந்து பேசியதற்கு உடனே நன்றி கூறினேன். இப்போதும் லட்சக்கணக்கான சிறுத்தைகளின் சார்பில் உதயநிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால், பெரியாரை ஆசான் என சொல்லும் உதயநிதி, திருமாவளவனை ஆசான் என சொல்வதா? என சிலர் நஞ்சை கக்குகின்றனர். பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்கு திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது?.. புரட்சியாளர் அம்பேத்கரை தன்னுடைய தலைவர் என்று போற்றியவர் தந்தை பெரியார். அவரை போல இன்று உதயநிதி எழுச்சித்தமிழரை தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாக பேசும் பக்குவத்தையும் துணிச்சலையும் பெற்றுள்ளார். பெரியாரை கன்னடர் என்று திராவிட இயக்கத்துக்கு எதிராக வெறுப்பைக்கக்கும் கும்பலோடு கைகோர்த்து கொண்டு பெரியார் மீது கரிசனம் காட்டுவது வியப்பாக உள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சி இன்று தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து நின்றாலும் திராவிட இயக்கங்களுடன் உள்ள கொள்கை உறவு மாறாது என்பதை தான் உதயநிதிஸ்டாலின் கூற்று தெளிவுபடுத்துகிறது. இதனை ஏற்கவும் சகிக்கவும் இயலாதவர்கள் பொறுமை இழந்து புலம்புகின்றனர். இந்நிலையில் அய்யன் திருவள்ளுவர் சொல்லுவது தான் நினைவுக்கு வருகிறது.
















