மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் பகிரங்க கோரிக்கை முன் வைப்பு.
(மன்னார் நிருபர்)
(11-05-2021)
இந்தியாவில் இடம் பெற்று வருகின்ற அபாயகரமான சூழ் நிலையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்படாத விதத்தில் அனைவரும் இணைந்து சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின் பற்றி மாவட்ட மக்களையும் மாவட்டத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும், முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் சுகாதார துறையினர்,பொலிஸ்,இராணுவம்,கடற்படை அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,அரச தனியார் போக்குவரத்து பிரதி நிதிகள்,வர்த்தக சங்கம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த கலந்துரையாடலில் திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
எதிர் வரும் நாட்களில் மாவட்ட ரீதியாக எவ்வாறான நடை முறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் குறிப்பாக தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய தேவைகள் அடையாளம் கண்டு அவர்கள் வெளி மாகாணங்களுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ‘பாஸ்’ நடை முறைகள் தொடர்பாகவும் நாங்கள் இன்றைய தினம் (செவ்வாய்) கலந்துரையாடி உண்மையில் அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு மாத்திரமே அத்தியாவசிய சேவைக்கான பாஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி புதிது புதிதாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது தொடர்பாகவும் தெழிவு படுத்தியுள்ளோம்.
அத்தோடு மீனவர்கள் கட்டாயம் தமது கைகளில் வழங்கப்படும் பாஸ் வைத்திருக்க வேண்டும் என கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள பணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.எனவே மன்னார் மாவட்ட மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் போது பாஸ் கொண்டு செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு, மீனவர்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு உற்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மீனவர்கள் பாஸினை கொண்டு செல்வது கட்டாயம்.மேலும் மன்னார் மாவட்டத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகள் நாளைய தினம் புதன் கிழமை அதிகரிக்கப்படும்.
குறிப்பாக முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள், சுகாதார நடை முறைகளை பின் பற்றாதவர்கள், போக்கு வரத்து நட முறைகளை பேனாதவர்கள் ஆகியோருக்கு கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வர்த்த நிலையங்கள் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கக்கூடிய வகையிலும், கிராமங்களில் நடமாடும் சேவைகளை மேற்கொள்ளும் வகையிலும் நாங்கள் கலந்துரையாடி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
வங்கி நிர்வாகம் தமது வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய விதத்தில் சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் வழியுறுத்தியுள்ளோம்.
அதே போன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள வியாபார நிலையங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து அவர்கள் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வழியுறுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் மக்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லை என்றால் நாங்கள் இந்த அபாயத்தில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்வது பாரிய சவாலாக இருக்கும்.
ஒவ்வொறு தனி நபர்களும் தனதும்,தனது குடும்பத்தினரதும், சமூகத்தினதும், நாட்டினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் இடம் பெற்று வருகின்ற அபாயகரமான சூழ் நிலையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்படாத விதத்தில் அனைவரும் இணைந்து சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின் பற்றி மாவட்ட மக்களையும் மாவட்டத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும் என அனைவரிடமும் கோரி நிற்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.