அகில உலக யோகா சம்மேளனம் அகில உலக யோகா வெற்றியாளர் 2021 போட்டியை ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் இணைய வழியில் நடத்தியிருந்தது. இப்போட்டியில் யாழ். யோகா உலக அமைப்பு சார்பாக கணேசமூர்த்தி ராஜ்குமார் வெவ்வேறு இரு யோகா போட்டிகளில் போட்டியிட்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் வளையுந்தன்மையுடைய ஆசன பிரிவிலும் (Flexibility yoga) விசேட ஆசன பிரிவிலுமே (Advanced yoga) இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நிறுவுனரும் யோகா போதனாசிரியருமான எஸ். உமாசுதன் போட்டியில் வெற்றியீட்டும் வகையில் சாதனையாளனுக்கு யோகா பயிற்சிகள் நுணுக்கமாக வழங்கப்பட்டதோடு நுட்பங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. யோகா வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேகமான இடமொன்றில் இவருக்கென தனியான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஆர்ஜென்டினாவை தளமாகக்கொண்டியங்கும் யோகா சம்மேளனத்தின் யோகா வெற்றியாளர் நிகழ்வில் இலங்கை, இந்தியா, மலேசியா முதலான பல நாடுகள் பங்குகொண்டன. இதன் முடிவுகள் மே மாதம் 8 ஆம் திகதி வெளியாகியிருந்தன. அகில உலக யோகா போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டியமைக்காக யோகா சம்மேளனத்தின் ஆசிய இயக்குநர் இராதாகிருஷ்ணன் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.