அகால மரணமடைந்த அபின்சன் வேலாயுதம் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வில் நண்பர்கள் கண்கள் கலங்கத் தெரிவிப்பு
“மொன்றியால் நகரில் நூற்றுக்கணக்கான நண்பர்களால் விரும்பப்பெறுகின்ற ஒரு அன்பனாகவும் சிறந்த விளையாட்டு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்த அபின்சன் வேலாயுதம் அவர்களின் அகால மறைவு இங்குள்ள இளையோரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை அநியாயமாக நாமும் அவரது குடும்பத்தினரும் இழந்துவிட்டோமே என்று அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளதை எங்கும் உணரக் கூடியதாக உள்ளது”
இவ்வாறு கடந்த 14-08-2021 அன்று சனிக்கிழமை மொன்றியால் நகரில் உள்ள அபின்சன் வேலாயுதம் அவர்களது இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய மறைந்த அபின்சன் அவர்களது நெருங்கிய நண்பர்கள் கவலையுடன் தங்கள் அஞ்சலியைப் பகிர்ந்து கொண்டனர்.
மொன்றியால் வாழ் தமிழர் சமூகத்தில் மாத்திரமல்ல வேற்றினங்களைச் சார்ந்த விளையாட்டு வீரர்களோடு நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டிருந்த செல்வன் அபின்சன் வேலாயுதம் கடந்த 04-07-2021 அன்று அகால மரணத்தைத் தழுவினார். அவரது நினைவாக இடம்பெற்ற ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மலர் வெளியீடும் கடந்த 14-08-2021 அன்று சனிக்கிழமை மொன்றியால் நகரில் உள்ள அபின்சன் வேலாயுதம் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. நண்பர்கள் உறவினர்கள் என குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்ட இந்த அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளர் வீணை மைந்தன் நினைவு மலரை வெளியிட்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மறைந்த அபின்சன் தனது வாழ்வில் பல நல்ல நண்பர்களையும் ஆற்றல் மிகுந்த தோழர்களையும் பெற்றிருந்தார். இது அவரது நற்பண்புகளுக்கு ஒரு உதாரணமாகும் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் அபின்சன் குடும்பத்தின் நெருங்கிய உறவினருமாகிய லோகேந்திரலிங்கம் உரையாற்றுகையில் மைதானங்களிலே தனது கால்களால் பந்தை எவ்வளவு உயரத்திற்கோ அன்றி எவ்வளவு தூரத்திற்கோ உதைத்து வெற்றிகளை ஈட்டிய அபின்சன் தான் வாழ்ந்த குறுகிய காலப்பகுதியில் கல்வியிலும் விளையாட்டிலும் பிரகாசித்தார். ஆனால் அவரது வாழ்வு அகாலத்தின் காரணமாக அஸ்தனமனமாகிவிட்டது என்றார்.
அவரைத் தொடர்ந்து அபின்சனின் நண்பர்கள் சிலர ; உரையாற்றினார்கள். தொடர்ந்து அபின்சனின் தந்தை வேலாயுதம் அவர்கள் உரையாற்றும் போது அபின்சன் எங்கள் குடும்பத்தை விட்டு நீங்கிச் சென்றாலும் அவர் விளையாட்டின் மூலம் வெற்றிகளாய்க் குவித்த கேடயங்களும் கிண்ணங்களும் தொடர்ந்து எங்கள் இல்லத்தை அலங்கரிக்கும் என்றார்.
(செய்தியும் படங்களும் சத்தியன்)