வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும், உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மக்களுக்கான பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அவர் வழங்கிய விசேட செவ்வி முழுமையாக,,,,,,,,
கே:- தற்போது நாட்டில் இரசாயன பசளை நிறுத்தப்பட்டு சேதன பசளை மூலம் இலங்கையில் உற்பத்தியை மேற்கொள்ள அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.எனினும் விவசாயிகள் பசளை இன்றி விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
பதில்:- கடந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இரசாயன பசளையை நிறுத்தி சேதன பசளை மூலம் இலங்கையில் உற்பத்தியை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் குறித்த முயற்சி முழுமையாக தோல்வியடைந்து விவசாயிகள் தற்போது வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சேதன பசளையும் இல்லை. விவசாயிகள் நெல் விதைக்கும் ஆரம்ப கால பகுதியில் பசளை இல்லாமல் எவ்வாறு விதைப்பது என்று உள்ளனர்.
விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். நாட்டில் உள்ள விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு பசளை வழங்காத நிலையில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கு பசளையை கொடுத்து உள்ளூர் உற்பத்தி யை ஊக்குவித்து நாட்டு மக்களுக்கு அரிசியை வழங்க முயற்சி எடுப்பதா? அல்லது பசளையை நிறுத்தி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதா? என்ற சிந்தனையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.
-தற்போது அரசாங்கம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அல்லது அவர்கள் தங்களுடைய சொந்த இலாபத்திற்காக அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பசளையை வழங்கி இருந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை.எனவே அரசாங்கம் உடனடியாக விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
கே:- இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது.வடக்கை சேர்ந்த தமிழர் ஒருவர் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவரின் செயல்பாடுகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது.யுத்தத்திற்கு பிற்பாடு இந்திய இழுவைப்படகுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் வட கடல் பகுதிக்குள் அவர்களின் மீன்பிடி ஆதிக்கம் காணப்படுகின்றது.இந்தியாவின் இலுவைப்படகுகளினால் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் காத்திரமான ஒரு செயல்பாட்டை முன்னெடுப்பது இல்லை.
கடந்த அரசாங்கத்தில் இருந்த போது எங்களுடைய தொடர்ச்சியான அழுத்தங்களால் பல இந்திய படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதோடு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது மன்னார்,முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கின்ற அளவிற்கு இந்திய இழுவைப்படகுகள் வந்து செல்கிறது.
கடற்றொழில் அமைச்சரும், அரசாங்கமும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர். இதற்கு பிரதானமான காரணம் இந்தியாவிற்கு பயந்து அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள்.இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடமும் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன்.அரசாங்கத்திடமும் பல முறை பாராளுமன்றத்தில் கதைத்துள்ளேன். ஆனால் இவ் விடயத்தில் கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அண்மைக்காலமாக மிக மோசமாக இந்திய இழுவைப்படகுகள் வந்து வட கடலில் இருக்கின்ற எமது மீனவர்களின் வலைகளையும்,படகுகளையும்,மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
இதனால் எமது மீனவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் கடல் தொழில் அமைச்சு மௌனமாக இருப்பதை விட கடல் தொழில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.
வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக இருந்தும் கூட வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் அவர் மௌனமாக இருப்பதை விட சிங்களவர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்தால் எமது அழுத்தத்தின் காரணமாக ஓர் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கடற்றொழில் அமைச்சின் தற்துணிவு இல்லாத நிலையே வட பகுதி மீனவர்கள் இந்திய இழுவைப் படகு மூலம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கே:- மாகாண சபை தேர்தலை வெகு விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.மாகாண சபை தேர்தலை நடத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளமை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்பட வேண்டும்.இந்திய அரசாங்கத்தின் அலுத்தத்தின் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முனைகின்றதா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும்.
-ஆனால் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.அதில் இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான முழுமையான அதிகாரத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு முழுமையாக இந்தியாவுக்கு இருக்கிறது.
இலங்கையில் யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது,13 ஆவது திருத்தச் சட்டத்தை மாகாண சபை முறைமையை இலங்கைக்கு கொண்டு வந்து தமிழர்களுக்கு தீர்வாக இந்தியா ஒரு முனைப்பு செய்திருந்தது.ஆனால் இன்றைக்கு சுமார் 33 வருடங்கள் கடந்தும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத ஒரு அரசாங்கமாக இந்திய அரசாங்கம் இருக்கிறது.அவர்கள் தொடர்ச்சியாக வருகின்றார்கள்.
-அவர்கள் வருகின்ற போது இலங்கை அரசாங்கத்திற்கு என்ன விடையத்தை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் செய்தி வருகிறது. அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக பயண்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு கூறியதாக செய்திகள் வருகின்றது.
-இந்தியாவை பொறுத்த வகையில் குறித்த விடயத்தை செய்ய நினைத்தால் தற்போது உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் குறித்த விடயம் இந்தியாவிற்கு பெரிய விடயம் இல்லை.
அவர்கள் முழுமையாக தமது பலத்தை பயன்படுத்துகிறார்களா? அல்லது தமது நாட்டின் நலன்களுக்காக இந்த விடயங்களை இராஜதந்திர ரீதியில் கையாளுகின்றார்களா?என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
கே:- சீனாவின் ஆதிக்கம் அண்மைக் காலமாக இலங்கையை மையப்படுத்தி காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் உள்ள 3 தீவுகளை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு மின் உற்பத்திக்காக ஒப்படைத்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழர்கள் எந்த அளவுக்கு இறைமையாக இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நாங்கள் இருக்கின்றோமோ அந்த அளவிற்கு இலங்கையர்களும் இறைமையாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இலங்கையில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தவறான பொருளாதார கொள்கைகள்,தவறான நிதியாடல்கள் மற்றும் தாங்கள் தாங்கள் அரசியலில் இருக்கும் போது தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும்.அல்லது தங்களுடைய அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என எடுக்கும் தவறான முடிவுகளால் இலங்கையின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இறுக்கமான சூழ்நிலையில் இருந்து ஆட்சியாளர்கள் மீண்டு வருவதற்கு இலங்கையில் இருக்கின்ற பல பிரதேசங்களை ஒவ்வொரு நாட்டிற்கும், வர்த்தகத்திற்கு பயன்படுத்தக்கூடிய நாட்டின் மைய பகுதிகளை உலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்கிறது.எங்களைப் பொறுத்த வகையில் இந்தியா என்பது எமது தாய் நாடு.இந்தியாவிற்கு எமது பிரதேசங்களில் இருக்கும் இடங்களை அல்லது சில விடையங்களை மேற்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இருக்கிறது.
இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் இவ்விடயம் தொடர்பாக நேரடியாக நாங்கள் கூறியுள்ளோம்.தமிழர்களின் கலாச்சாரமும், இந்தியர்களின் கலாச்சாரத்திலும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.ஆனால் சீன அரசாங்கத்தை பொறுத்த வகையில் சீன அரசாங்கத்தின் ஆதிக்கம் என்பது அண்மைக்காலமாக இலங்கையை மையப்படுத்தி அதாவது யுத்தத்திற்கு பிற்பாடு காணப்படுகின்றது.
-யுத்தம் முடிவுறாமல் இருந்திருந்தால் இன்று சீனாவின் ஆதிக்கம் கணிசமான அளவு குறைவடைந்து காணப்பட்டிருக்கும்.இந்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருக்கும் தீவுகளை குறிப்பாக 3 தீவுகளை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு மின் உற்பத்திக்காக ஒப்படைத்ததில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை.அப்படி ஒப்படைப்பதாக இருந்தால் இந்தியாவிற்கு கொடுப்பதற்கு தமிழ் மக்கள் விரும்புவார்கள்.ஆனால் சீனாவிற்கு கொடுத்ததில் தமிழ் மக்களுக்கு உடன்பாடு இல்லை என்று துறை சார் அமைச்சரிடம் நாங்கள் கூறி இருந்தோம்.இந்த விடையம் தொடர்பாக அரசாங்கம் உண்மையாக செயல்பட வேண்டும்.
-இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதையே ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திப்பது என்ன என்றால் அடுத்த தேர்தலில் நாங்கள் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதையே சிந்திக்கிறார்கள்.இலங்கையில் உள்ள பொருளாதார வர்த்தக மையங்களை வெளிநாடுகளுக்கு கொடுப்பதில் உடன்பாடு இல்லை.
கே:- இலங்கையில் திடீரென அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்:- இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே இரவில் பல மடங்குகளாக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு இலங்கை வரலாற்றில் இம்முறை ஒரே தடவையாக சுமார் 1200 ரூபாவினால் அதிகரித்துள்ளது.மேலும் அரிசி,சீனி,சீமெந்து உள்ளிட்ட கட்டிட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.
-விலை கோரல் மனுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது.நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரிப்பால் விலை கோரல் மனுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-அரசாங்கத்தின் தவறான முடிவால் இன்று மக்கள் இவ்வாறான கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமாக இருக்கலாம்,பசளையின் தட்டுப்பாடாக இருக்கலாம் இன்று நாட்டில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் எடுத்துள்ள தவறான முடிவுகளும், தவறான கொள்கைகளுமே மிகவும் காரணமாக இருக்கிறது.
அரச உத்தியோகத்தர் அல்லது இலங்கையின் சாதாரண பிரஜை தனது சம்பளத்தில் வாழ முடியாத சூழ் நிலையே தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.எனவே இலங்கை அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.