மன்னார் நிருபர்
(7-11-2021)
பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் தங்காலை கிளை வளாகத்தை நிர்மாணிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) முற்பகல் அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளுடன் கூடிய சேவையை வழங்கும் நோக்கத்துடன் புதிய வங்கி வளாகத்தை நிர்மாணித்து வருகிறது.
சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்.
புதிய வங்கி வளாகம் தங்காலை பெலியத்த வீதியை நோக்கியதாக நிர்மாணிக்கப்படும்.
குறித்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, டீ.வீ.சானக, தேனுக விதானகமகே, ஜானக வக்கும்புர, பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான தமிதா குமாரி ரத்நாயக்க உள்ளிட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.