இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது
இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிடமும் உதவிகளைக் கேட்டுள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில், திருகோணமலை எண்ணெய் கிடங்கு கூட்டு வளர்ச்சி பணிக்காக இந்தியா பக்கம் திரும்பியுள்ளது இலங்கை என அறியப்படுகின்றது
இலங்கை கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசிகள் அனைத்தும் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதற்கிடையே சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஜனவரி 7-9 நாட்களில் இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவில் இருந்து 99,000 டன் உரத்தை இறக்குமதி செய்வதற்கான ஆர்டரை இலங்கை ரத்து செய்து. இதனால் அதிருப்தி அடைந்த சீனா, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இம்மாத தொடக்கத்தில் அந்த சீன நிறுவனம் 8 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதையடுத்து 6.4 மில்லியன் டாலரை செலுத்த இலங்கை ஒப்புக் கொண்டது. இந்தச் சூழ்நிலையில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-இன் வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இழந்த நல்லுறவை மீட்க முடியும் எனச் சீனா நம்புகிறது.
இதற்கிடையில், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்கு பண்ணையை இந்தியாவுடன் கூட்டாக மேம்படுத்தும் திட்டங்களை இறுதி செய்வதில் இலங்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக இரு நாட்டில் இருந்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இது தவிர இலங்கையின் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் உதவும் வகையில் நிதியுதவியை அளிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரண்டு விஷயங்களும் (திருகோணமலை கிடங்கு, இலங்கையின் நிதி நெருக்கடி) என இரண்டும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஒன்றை நாம் செயல்படுத்தத் தொடங்கினாலே பொருளாதார நிலைமை மேம்படும். அடுத்த மாதம் திருகோணமலை எண்ணெய் கிடங்கு ஒப்பந்தத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த நவம்பர் மாதம் 1.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உணவு இறக்குமதியும் குறைந்துள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், கடனை திருப்பி செலுத்தும் நாடுகளுக்கான மதிப்பீட்டில் இலங்கையை CCஇல் இருந்து CCC என்ற நிலைக்கு தரமிறக்கியது.
ஃபிட்ச் நிறுவனத்தின் இந்த செயலை விமர்சித்த இலங்கை அரசு , நிதி உதவிக்காக நட்பு நாடுகளை இலங்கை தொடர்பு கொண்டு வருவதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மார்ச் 2022 இறுதிக்குள் நட்பு நாடுகளில் இருந்து நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. சீனாவிடம் உதவி சீனாவிடம் இருந்து கடன் மற்றும் வெளிநாட்டு நாணய கால நிதியுதவி ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது இலங்கை. இது தவிர 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுடன் கடனை இலங்கை ரூபாயாகவே செலுத்தும் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது. அதேபோல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் இலங்கை ரூபாயாகப் பணம் செலுத்துவது குறித்தும் இலங்கை ஆலோசித்து வருகிறது.
பயணம் இத்துடன் நிற்காமல் இலங்கை இந்தியாவிடமும் உதவி கோரியுள்ளது. இதற்காகக் கடந்த நவம்பர் மாதம் டெல்லிக்குச் சென்ற இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். எரிபொருள் இறக்குமதி கடன், திருகோணமலை எண்ணெய் கிடங்கு இந்தியா-இலங்கை கூட்டுத் திட்டம், நாணயப் பரிமாற்றத்தின் சலுகை உள்ளிடவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருகோணமலை எண்ணெய் கிடங்கு திட்டத்திற்கு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.