(எமது யாழ் செய்தியாளர்)
கொழும்பிலிருந்து வந்த உத்தரவொன்றை அடுத்து தமிழ் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை அரசுடைமையாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்களை முழுமையாக சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வலி வடக்குப் பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது. இதில் இராணுவத்திற்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு 2022-09-23 காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் வலி. வடக்கில் மீனவர்களின் நிலம் 212 ஏக்கரும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 612 ஏக்கரும் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூண்டோடு இராணுவ மயமாக்கலிற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இதேநேரம் வலி. வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றில் நவம்பர் மாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கு கொழும்பு காய் நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.